ஆசிரியர் தம்பதியாக இருந்தும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு என்ன காரணம்?

By 
s555

சிவகாசி அருகே 3 மாதம் குழந்தை உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம் என தெரியவந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம்(44). இவரது மனைவி பழனியம்மாள்(47). இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர். இந்த தம்பதிக்கு மகள் ஆனந்தவள்ளி (24), மகன் ஆதித்யா (13) பேத்தி 3 மாத குழந்தை சஷ்டிகா உள்ளிட்ட 5 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், லிங்கம் குடும்பத்தினர் நீண்ட நேரமாகியும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 3 மாத குழந்தை உட்பட 5 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதனை அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் தம்பதி பல பேரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். இதனை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதனிடையே லிங்கம் வீட்டில் இருந்து போலீசார் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அது லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ஆனந்தவள்ளி ஆகியோர் பயன்படுத்தியது தெரியவந்தது. லிங்கம் பயன்படுத்தி வந்த செல்போனில் இருக்கும் வாஸ்ட் அப் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது சிலர் கடன் தொகையை திருப்பி கேட்டு அனுப்பி இருந்த மெசேஜ்கள் இருந்தன.

இதனை கொண்டு ஆசிரியர் லிங்கத்துக்கு யார்? யார்? கடன் கொடுத்தார்கள் என்ற பட்டியலை போலீசார் முதல் கட்டமாக தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் லிங்கத்துக்கு கடன் கொடுத்தவர்களில் சிலர் முக்கிய பிரமுகராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story