அரசு பணிகளுக்கான தேர்வு முடிவு எப்போது வெளிவரும்? : டிஎன்பிஎஸ்சி் புதிய அறிவிப்பு

By 
tnpsc9

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு நடத்தி, இதுவரை தேர்வு முடிவு வெளியிடாத பணியிடங்களுக்கு, தேர்வு முடிவு எப்போது வெளியிடும்? என்பது தொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

 * குரூப்-2, 2 ஏ பதவிகளில் வரும் 5,446 காலிப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி முதன்மைத் தேர்வு நடந்தது. அதற்கான தேர்வு முடிவு வருகிற செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

 * குரூப்-4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. 

* குரூப்-1 பதவிகளில் இருக்கும் 95 காலி இடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) வெளியாகிறது. 

* தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் கீழ் வரும் 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 15-ந்தேதி நடந்த நிலையில், அந்த தேர்வு முடிவு மே மாதம் வெளியிடப்படும். 

* இதேபோல், ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைத்துறையில் வரும் 217 பணியிடங்கள், மீன்வளத்துறையில் 64 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 24 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள், தமிழ்நாடு சுகாதார சேவைத்துறையின் கீழ் வரும் 12 சுகாதார அதிகாரி பணியிடங்கள், 8 ஜெயிலர் பணியிடங்கள், 10 வனப்பயிற்சியாளர் பணியிடங்கள் உள்பட சில பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும், 

இதுதவிர, மேலும் சில பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மே மாதத்திலும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவு அட்டவணையை போலவே, காலிப் பணியிடங்கள் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆண்டு அட்டவணையையும் டி.என்.பி.எஸ்.சி. புதுப்பித்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

 * 59 உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். 

23 உதவி சுற்றுலா அதிகாரி (கிரேடு-2) காலி இடங்களுக்கு அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படுவதோடு, ஜூலை மாதம் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. 

* தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தில் 14 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடக்கிறது. 

* 194 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். தேர்வு அக்டோபர் மாதத்தில் நடக்கும். 

* 384 ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணி இடங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். 

* குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் தேர்வு நடக்கும். காலி இடங்கள் குறித்த விவரம் விரைவில் தெரிவிக்கப்படும். 

* இதுபோல மொத்தம் 29 வகையான பணியிடங்கள் குறித்த விவரத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருக்கிறது.

Share this story