ரூ.6000 நிவாரணத் தொகை யாருக்குக் கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை வெளியீடு

By 
60001

மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அது தொடர்பான விரிவான தகவல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையின்படி, சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்பட உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மட்டும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரண தொகை ரூ.6000 மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புத்தூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்கும். திருவள்ளூர் மாவட்டத்திலும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு மட்டும் ரூ.6000 நிவாரணத் தொகை கொடுக்கப்படும்.

6000 ரூபாய் நிவாரணத் தொகை தவிர, வேறு பல நிவாரண உதவிகளும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, மாடுகள் உயிரிழப்புக்கு ரூ.37,500, ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ.4,000, முழுதும் சேதமடைந்த மீன்பிடி வலைகள் மற்றும் கட்டுமரங்களுக்கு ரூ.50,000, பகுதி அளவுக்குச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.17.60 கோடி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

Share this story