திருமணமான ஒரு மாதத்தில், கணவன் கழுத்தை அறுத்துக் கொல்ல புதுப்பெண் முயற்சி : காரணம் என்ன..?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயிணிக்கும்(25) கடந்த மாதம் 3-ந்தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த 5-ந்தேதி தாட்சாயிணி தனது காதலரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருடன் சேர்ந்து சரவணனை தாக்கி கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து சரவணன் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் தாட்சாயிணி, சரவணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி, தனது காதலன் ராஜசேகருடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தாட்சாயிணி சம்பவத்தன்று தனது காதலர் ராஜசேகரை தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து சரவணனை கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்று உள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.