சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.! பதறிய பயணிகள்..
![cic6](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/f0bd52b77b267728368b2ee12c9cb82f.jpg)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் மூலம் தினமும் வட மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு வருவதும் போவதுமாக உள்ளனர். ஆகையால், இந்த ரயில் நிலையத்தில் 24 மணிநேரமும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.