உங்கள் இடத்தில் புதையல் உள்ளது; ஆசையை தூண்டி ரூ.7.5 லட்சம் அபேஸ் செய்த ஆசாமிகள்..

By 
fack2

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் விமலா (வயது 50).  இவர் மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து இரண்டு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது சகோதரர்களுடன் இணைந்து செங்கல் சூளை நடத்தி வருகிறார். செங்கல் சூளையில் நட்டம் ஏற்பட்டதால் திகைத்து நின்ற விமலா, அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவர் மூலம் பரிகார பூஜை செய்ய இருவர் அறிமுகமாகி உள்ளனர்.

கொல்லிமலை சாமியார்கள் என்று அறிமுகமான சாய் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் மாந்திரீகம் செய்வதில் கில்லாடி என சொல்லி, விமலாவிடம் ஜோசியம் பார்ப்பது போல் பணம் சம்பாதிக்க பல்வேறு ஆசை வார்த்தைகளை தூண்டி உள்ளனர். மேலும், உங்கள் செங்கல் சூளையில் புதையல் உள்ளது எனவும், அதை எடுக்க சிறப்பு பரிகார பூஜை செய்யவேண்டும் எனக் கூறி,

விமலாவை கொல்லிமலை வரவழைத்து புதையலை எடுப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக 7.5 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு விமலாவின் வீட்டில் மாந்திரீகம் செய்வது போல் கடந்த மாதம் 13ம் தேதி சாமி சிலை மற்றும் மண் பானை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து 48 அமாவாசை வரை இதனை தொடக்கூடாது எனக் கூறியுள்ளனர். மீறித் தொட்டால் வீட்டில் கஷ்டங்கள் நேர்ந்து விடும் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து கஷ்டங்கள் தீராத விமலா ஒரு கட்டத்தில் இரு மகன்களை வைத்து பூஜையில் என்ன உள்ளது என சோதனை செய்ததில் மண்பானைக்குள் மண் மட்டுமே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விமலா மற்றும் அவரது குடும்பத்தினர் சாமியார்கள் 2 பேரையும் தொடர்புகொண்டு, தங்களுக்கு தெரிந்தவர் வீட்டில் பரிகார பூஜை ஒன்று செய்யவேண்டும் எனக் கூறி வரவழைத்துள்ளனர்.

அதன்படி, விமலா வீட்டிற்கு வந்த இருவரையும் பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சார்ந்த சுரேஷ் (வயது 46), சரவணன் (வயது 44 ) என்பதும், போலிசாமியார்கள் என்பதும் தெரியவந்தது. ஜி.பே மூலம் பல கட்டங்களாக 7.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த வாழப்பாடி காவல் துறையினர், இது போல் வேறு யாரிடமும் பணம் மோசடி செய்துள்ளார்களா என விசாரணை செய்து வருகின்றனர்.

Share this story